பூடான் பாராளுமன்ற தேர்தல் - ஆட்சியை பிடித்த மக்கள் ஜனநாயக கட்சி!
பூடான் பாராளுமன்ற இறுதிச்சுற்று தேர்தலில் 47 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி 30 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.
தெற்கு ஆசிய நாடான பூடானில் 2008ம் ஆண்டு பாரம்பரிய மன்னராட்சி முறை முடிவுக்கு வந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் பூடானில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று பூடானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டில் நான்காவது முறையாக நடைபெறும் தேர்தல் இதுவாகும்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், மக்கள் ஜனநாயக கட்சி 47 தொகுதிகளில் 30 இடங்களைக் கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூடான் டெண்ட்ரல் கட்சி 17 இடங்களைப் பிடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பூடான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.
மக்கள் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றுள்ளதால், 58 வயதான டிசிரிங் டாப்கே 2-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.