உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி : பிரதமர் மோடி கண்டனம்!
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது இன்று நீதிமன்ற அவையிலேயே ஒருவர் காலணி ஒன்றை வீச முயன்றுள்ளார். விஷ்ணு சிலை ஒன்றின் மீதான விசாரணையின் போது நீதிபதி கவாய், கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர் இச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் இச்சம்வத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களிடம் பேசினேன். இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. நமது சமூகத்தில் இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது நீதியின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது" தெரிவித்துள்ளார்.