சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து இந்த காதல் ஜோடிக்கு நேற்று (ஜூன் 13) கட்சி அலுவலக வளாகத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அழைத்துச் செல்ல கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது திருமணமான பெண் அவர்களுடன் செல்ல மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியின் அலுவலகம், கண்ணாடி, இருக்கைகள், கதவு என அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.