புதுச்சேரியில் விஷவாயுவால் மேலும் ஒரு பெண் மயக்கம்!
வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்த பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு, அப்பகுதியில் இருந்த வீடுகளில் கழிவறை வாயிலாக வெளியேறி, கழிவறைகளை பயன்படுத்திய ஐந்து பேர் விஷவாயுவால் தாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை மீட்ட உறவினர்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதில், செல்வராணி (15), செந்தாமரை (85) மற்றும் அவரது மகள் காமாட்சி ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், பாலகிருஷ்ணன் (70) மற்றும் பாக்கியலட்சுமி (30) ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து, புதுநகா் 4வது தெருவில் போலீசார் குவிக்கப்பட்டனா். 4வது தெரு மற்றும் அருகிலுள்ள 3 தெருக்களைச் சோ்ந்தவா்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனா்.
பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் மற்றும் மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா். இதனிடையே, விஷவாயு தாக்கிய புதுநகர் 6வது தெருவில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அருகில் உள்ள இமாகுலேட் பள்ளிக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராணி (34) என்பவருக்கு இன்று அதிகாலை மயக்கம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.