அம்பேத்கர் உருவ சிலை உடைப்பு - உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!
உத்திர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சக்கோதர் கிராமத்தில் உள்ள பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் உருவ சிலை உடைத்து சேதப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளூர் வாசிகளின் போராட்டத்தை தூண்டியது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து, நேற்றிரவு(ஜூன்.09) இச்சம்பவம் நடந்துள்ளது என்றும் இதனால் கோபமடைந்த அப்பகுதியில் பொது மக்கள் இன்று அதிகாலை கூட்டம் கூடி கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியதால் சற்று நேரம் பதற்றம் நிலவியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் அறிந்து விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி, 24 மணி நேரத்திற்குள் மாற்று சிலை நிறுவ உறுதியளித்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்டது யாரென தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திர பிரதேசத்தில் இது போன்ற சில சிலை சேத சம்பவங்கள் சமூக அமைதி சீர்குலைய காரணமாக இருந்ததால், காவல்துறை உன்னிப்பாக அப்பகுதியின் நிலைமையை கண்காணித்து வருகிறது.