அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | காளை முட்டியதில் முதியவர் உயிரிழப்பு!
தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன.14) அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் 9 சுற்றுக்களாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி மாலை 6.15 மணியளவில் நிறைவடைந்தது. இதில் 20 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடம் பிடித்தார். முன்னதாக பெரியசாமி (வயது 66) என்ற முதியவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளை எதிர்பாராத விதமாக பெரியசாமியின் கழுத்தில் குத்தியது.
இதில் படுகாயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தமாக 76 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.