திருவண்ணாமலையில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
'லால் சலாம்' திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார்.
லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்து உள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது.
இத் திரைப்படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.