“2026 சட்டமன்ற தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்!” - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
“2026 சட்டமன்ற தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்” என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட, இந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் திமுகவிற்கு கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஊடகங்கள் அதிமுகவிற்க்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது. திமுகவில் அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தனர். அதேபோல் ராகுல் காந்தி, திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் பிரச்சாரம் செய்தார்கள்.
பாஜகவில் பலமுறை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். மேலும் அந்த கட்சியின் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் பிரச்சாரம் செய்தனர். இதற்கு மத்தியிலும் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இது சட்டமன்ற தேர்தல் அல்ல. மத்தியில் யார் வர வேண்டும் என்கிற தேர்தல். 2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும்.
மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் திமுகவிற்கு இந்த தேர்தலில் வாக்கு கிடைத்தது. எங்ளை போல தனியாக நின்று இருந்தால் வாக்கு கிடைத்து இருக்காது.
மேற்கு மண்டலம் திமுக கோட்டை என கற்பனையாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். இந்திய கூட்டணிக்கும், பா.ஜ.க கூட்டணிக்கும் போட்டி இருந்தது. அதிமுக தமிழக உரிமைகளை காக்க நடுநிலையோடு இருந்தது” என தெரிவித்துள்ளார்.