அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!
நாட்டில் முதன்முறையாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அக்னி பிரைம் ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் படைத்துள்ளது. இந்த நிலையில் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.
இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் ஒருங்கிணைந்து, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவப்பட்டது. அடுத்த தலைமுறையை சேர்ந்த இந்த ஏவுகணையில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில நாடுகள் மட்டுமே கொண்டிருக்கும் இந்த தனித்தன்மை வாய்ந்த திறன்களை இந்தியாவும் பெற்றுள்ளது. இந்த பரிசோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) க்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்து உள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து அக்னி ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணை 2000 கிமீ வரை சென்று தாக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுகணை சோதனை சிறப்பாக செய்யப்பட்டது.
இந்த ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்கு டிஆர்டிஓ, மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றிகரமான சோதனை இந்தியாவை ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவுகணைகள் ஏவும் திறன் கொண்ட நாடாக மாற்றி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.