"அமீர்கான் எனக்கு வில்லனாக நடிக்க ஆசைப்பட்டார்" - விஷ்ணு விஷால்!
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் ‘ஆர்யன்’ படம் ஆக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவனும் நடித்து உள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். இந்த படம் கிரைம், திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இந்த நிலையில் படம் குறித்து நடிகர் விஷ்ணுவிஷால் கூறுகையில்,
"படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். படத்திற்கு என் மகன் ஆர்யன் பெயரை தான் தலைப்பாக வைத்துள்ளேன். மும்பையில் ஒருமுறை இந்தி நடிகர் அமீர்கானை சந்தித்த போது இந்த படத்தின் ஒன்லைன் கதையை சொன்னேன். அவருக்கு பிடித்து போக உடனடியாக முழு கதையையும் சொல்ல சொன்னார்.
மும்பையில் இரவு 10 மணி முதல் அதிகாலை வரை கதை கேட்டார். வில்லன் கேரக்டரில் அவர் நடிக்க விரும்பினார்.
அதற்குபின் பல முறை கதை பற்றி விவாதித்தோம். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். அவர் கேரக்டர் பேசப்படும். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் ரிலீஸ் ஆகிறது. நான் நடித்த போலீஸ் ஆபிசர் கேரக்டர் மாறுபட்டதாக இருக்கும். இது போலீஸ் கதை, உளவியல், கிரைம் திரில்லர் பாணி என்றாலும் நான் நடித்த ராட்சசன் படமும் இதுவும் வெவ்வேறு கதைகள். நானே ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஆகி விட்டேன். அதனால் படங்கள் வேகமாக வருகின்றன.
ஒரே ஆண்டில் எப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி என இரண்டு படங்கள் ஹிட் கொடுத்தேன். மற்ற தயாரிப்பில் நடிக்கும் போது நிறைய காலம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லா படமும் நான் தயாரிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. சில காரணங்கள் என்னை தயாரிப்பாளர் ஆக்கியது. என் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நிருபராக நடித்துள்ளார்.
எனக்கு காமெடி கதைகள் பிடிக்கு. பல காமெடி படங்கள் கொடுத்து இருக்கிறேன். ஆனால் இப்போது காமெடி கதைகள் கேட்கவே பஞ்சம். அடுத்து கட்டா குஸ்தி 2 வர உள்ளது. என்னுடைய 60, 65 வயது வரை இந்த சினிமாவில் நான் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு கிரிக்கெட் தவிர எதுவும் தெரியாது. அடுத்ததாக அருண்ராஜ் இயக்கத்தில் ஒரு பாக்சிங் கதையிலும், சதீஷ் இயக்கத்தில் லவ் ஸ்டோரி ஒன்றிலும் நடிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.