"அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,
"உலக அளவில் வேகமாக வரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் நமக்கான வரப்பிரசாதமாக மாறும்.
'தன் தன்யா கிருஷி' என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்"
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.