தரையிறங்க முயன்ற விமானம் மீது பட்ட லேசர் ஒளியால் இடையூறு - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், 326 பயணிகள் உடன், நேற்று(மே.26) இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து, தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது.
அப்போது சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. இதனால் விமானி சற்று இடையூறு ஏற்பட்டாலும், அடுத்த சில வினாடிகளில் சுதாகரித்துக் கொண்டு, தாழ்வாக பறந்து கொண்டு இருந்த, விமானத்தை மேலும் உயரத்தில் பறக்கச் செய்தார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரமாக தகவல் தெரிவித்து, விமானம் தரையிறங்கும் போது, அதற்கு இடையூறு செய்வது போல் லேசர் லைட் ஒளி தெரிந்ததாக புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமான
பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடர் கருவினால், அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று ஆய்வு மேற்கொண்டனர். சில வினாடிகளில் அந்த ஒளி நின்று விட்டது.
அதன் பின்னர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்து தரையிறங்க வந்த விமானங்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்து தரையிறங்கின. ஆனாலும் இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களும் தகவல் கொடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரங்கிமலை பகுதியில் இருந்து வட மாநில கட்டிட தொழிலாளர்கள் மூன்று பேர் விளையாட்டாக லேசர் லைட் அடித்ததாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தங்களது செயலுக்காக மன்னிப்பு கோரிய அம்மூவரும் தங்களிடம் இருந்த லேசர் லைட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரும் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
விமானங்கள் மீது லேசர் லைட்கள் அடிக்கும் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ச்சியாக அடிக்கடி நடந்தன. அப்போது இந்திய
விமான நிலைய ஆணையம் இதுகுறித்து டூவிட்டரில், எச்சரிக்கை விடுத்ததோடு, இதை போல் விமானம் போக்குவரத்துக்கு இடையூறு செய்வர் குறித்து தகவல் தெரிந்தால், அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.