"தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்" - தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை!
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி. தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை.
ஆங்கிலேயர்களிடமிருந்து, தன் தாய் நிலத்தின் உரிமைகளைக் காத்திட, மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர். சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தவெக தலைவர் விஜய் கூறியிருப்பதாவது,
"தாய்மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர், இறுதி மூச்சுவரை விடுதலைக்காகப் போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர்,
மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.