அழகிரிக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு : உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், மு.க.அழகிரிக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளது. கல்லூரிக்கு அருகில் இருந்த 44 செண்ட் கோயில் நிலத்தை அபகரித்ததாக, மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், மு.க.அழகிரி, சம்பத்குமார் உள்பட ஏழு பேர் மீது நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். அதேபோல வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி அழகிரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், நில அபகரிப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை ஏற்று, போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து அழகிரியை விடுவித்து மதுரை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.