3வது டி20 போட்டி | இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டக்கெட் 51 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரான சாம்சன் 3 ரன்களிலும், தொடர்ந்து அபிஷேக் சர்மா 24 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 14 ரன்களிலும் திலக் வர்மா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை அடுத்து ஆடிய சுந்தர் 6 ரன்களிலும், அக்சர் படேல் 15 ரன்களிலும், துருவ் ஜுரெல் 2 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான் 3 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.