இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த சூழலில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் (269 ரன்) 587 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேமி சுமித் 184 ரன்களும், ஹாரி புரூக் 158 ரன்களும் எடுத்தனர். பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
அதன்படி, 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அடித்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 271 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 88 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.