அமெரிக்காவில் சூறாவளி பாதிப்பினால் 26 பேர் உயிரிழப்பு - இருளில் மூழ்கிய 2 லட்சம் மக்கள்!
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக காட்டுத்தீ, புழுதி புயல், பனி பாதிப்புகளும் மக்களை பெரும் இன்னலில் தள்ளியுள்ளன. இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான மிசோரி பகுதியில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் சூறாவளி பாதிப்புக்கு 12 பேர் உயிரிழந்த உள்ளனர். அதேபோல் அர்கான்சாஸ் மாகாணத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் கவுண்டியில் 29 பேர் காயமடைந்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் அமரில்லோ பகுதியில் ஏற்பட்ட புழுதி புயலின்போது கார் விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் காட்டுத்தீயால் 689 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான நிலம் எரிந்து நாசமாகியுள்ளது. டெக்சாஸ், கன்சாஸ், மிசவுரி மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்கள் அதிக பாதிப்படைந்து உள்ளன. இதேபோன்று கிழக்கு லூசியானா, மிஸ்ஸிஸ்ஸிப்பி, அலபாமா, மேற்கு ஜார்ஜியா மற்றும் புளோரிடா பான்ஹேண்டில் உள்ளிட்ட பகுதிகள், சூறாவளி மற்றும் புயல் பாதிப்புக்கு இலக்காகும் பகுதிகளாக அறியப்பட்டு உள்ளன.
மேலும் டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளன.