Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

15 கி.மீ. தண்டவாளத்தில் நடந்து வந்த பயணிகள் - ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்தது குறித்து வேதனை!

02:09 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்தவர்கள் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் வழியாக நடந்தே வந்ததாக தெரிவித்தனர். 

Advertisement

தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 500 பயணிகள் 3-வது நாளாக சிக்கி தவிக்கின்றனர்.  நெல்லை, கன்னியாகுமரி,  தென்காசி,  தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக அதி கனமழை பெய்தது.

இந்த நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது.  இதனால்,  டிசம்பர் 17- ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,  ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்தது.  ஆனால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதில் தாமதம் நீடிக்கிறது.  காலை 6 மணி முதல் ஹெலிகாப்டர் இறங்க முடியாமல் ரயில் நிலையம் பகுதியில் சுற்றி வருவதாகவும்,  ரயில் நிலையம் பகுதியில் உணவு பொட்டலங்களை வழங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிடும் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  ஸ்ரீவைகுண்டம் ரயிலிலிருந்து திருநெல்வேலி வரை ரயில் பாதை வழியாக பயணிகள் நடந்து வந்தனர். இது குறித்து நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் பிரசாந்த்திடம் அவர்கள் கூறுகையில்,  ரயிலில் உணவு இல்லாமல் தவித்து வந்ததாகவும்,  15 கி.மீ ரயில் பாதை வழியாக நடந்து வந்ததாகவும்,  700 க்கு மேற்பட்டோர் ரயில் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன்,  அரசிடமிருந்து இன்று காலை வரை உணவு வரவில்லை எனவும், ஸ்ரீவைகுண்டம் மக்கள் தான் ரயிலில் உள்ளவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீவைகுண்டம் ரயிலிருந்து நடந்து வந்த சுமார் 100 க்கு மேற்பட்ட பயணிகள் தாதன்குளத்தில் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.  அங்குள்ள மக்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவி வருகின்றனர்.  மேலும் இங்கிருந்து நடந்து செல்ல முடியாமல் பெண்கள், குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

Advertisement
Next Article