SIR-யை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
தமிழ் நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் விசிக, மக்கள் நீதி மையம், மதிமுக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாம் தமிழர், பாமக, தவெக உள்ளிட்ட 21 கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் எஸ்ஐஆர் குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்"
என்று தெரிவித்துள்ளார்.