நீதிபதி சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மனு!
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதன்படி தீபம் ஏற்றச்சென்றபோது பிரச்சினை ஏற்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே,நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளதாக தமிழக எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருடன் இணைந்து மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் வழங்கினார்கள். தகுதி நீக்க தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும், அந்த அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.