செக் மோசடி வழக்கு: திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது!
செக் மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். இவர் காதல் கோட்டை, வெற்றிக்கொடி கட்டு உள்பட பல தமிழ் திரைப்படங்களை தயாரித்தவர். இவர் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக ராஜ் டிவி நிறுவனத்தில் 1 கோடியே 70 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டது.
இதனால் ராஜ் டிவி நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் சிவசக்தி பாண்டியன் பணத்தை கொடுக்காததால் அந்த நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தனர். மேலும் நீதிமன்றமும் பல தவணைகள் வழங்கியும் பணத்தை திருப்பித் தர முன்வராததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். பிறகு அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.