முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்ள 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதில் தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வருகிற 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.